Monday, December 24, 2007

மார்கழி மாதம் மழையோடும் சில்லென்றும் ஆரம்பித்து விட்டது. மார்கழியோடு மனம் குளிர திருப்பாவையும் கேட்க ஆரம்பித்துவிட்டோம். தமிழகத்தில் எப்படியோ. ஆனால் ஆந்திரத் திருநாட்டில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிக்கிறது. பாரதி ஒருவேளை இங்கு வந்தால் 'அடடே! தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கக் செய்வீர் என ஆணையிட்டோமே, தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்களே..- பலே!!.. என்று மீசையை முறுக்கிக்கொள்வான். (பிறகு அவனுக்கு நாம் நினைவுபடுத்தவேண்டும்.. 'இது தந்தைநாடான தமிழ்நாடல்ல தலைவா..சுந்தரத்தெலுங்கு என்று சொன்னாயே.. அந்தத் தெலுங்கு நாடு' என.)

ஐதராபாத், செகந்திராபாத், விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் (திருப்பதி கேட்கவே வேண்டாம்-திருமலையிலோ முப்பது நாளும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் தமிழோசைதான்) இன்னும் எத்தனையோ நகரங்களில் சாயங்கால வேளையில் பனியில் நனைந்துகொண்டே ஆங்காங்கே கூட்டங்கள் அமர்ந்திருக்க, ஒரு பெரியவர் அல்லது பெண்மணியார் தமிழில் திருப்பாவைப் பாடி அதற்கு தெலுங்கில் விரிவுரை சொல்கின்றார்கள். தெலுங்குக்காரர்கள் தமிழ் பேசும்போது 'ழ' மற்றும் 'ள' நாக்கில் சரியாகப் பிறளாது (நம்மூரில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? - என யாரும் கேட்கவேண்டாம்) ஆனாலும் அவர்களின் மழலையின்பத் தமிழ்ப் பேச்சு காதில் இன்பத் தேனாய் விழுகிறது. சொல்பவர் மற்றும் கேட்பவர்கள் அத்தனைபேரும் தெலுங்கர்களே. நம்மை விட பக்தியாய் மிக ஆன்றுபோய் கேட்கிறார்கள்.

இந்த பக்தி இயக்கம் (அப்படித்தான் சொல்லவேண்டும்) கடந்த சில வருடங்களாகவே ஆந்திராவில் பெருகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு வைணவப்பெரியவர். பெயர் - அப்பளாசார்யுலு. பரமபதம் அடைந்து சில வருடங்களாகிறது. பழுத்த வைணவப்பழம். தெலுங்கு மற்றும் வடமொழியில் மன்னர். காசி பல்கலைக்கழகம் அவர்களாகவே இவரிடத்தில் வந்து ' மஹோபாத்தியாய' பட்டத்தைக் கொடுத்து விழா எடுத்தார்கள். இவர்தான் ஆந்திரத்தில் திருப்பாவை - முப்பது பாடல்களையும் முப்பது நாட்கள் உபன்யாஸமாக தெலுங்கு மக்களிடையே பரப்பிய மகான். இவரால் கற்பிக்கப்பட்ட எத்தனையோ பண்டிதர்கள் இன்று ஊரெங்கும் திருப்பாவை தமிழ்பரப்பி வருகிறார்கள். அவர்கள் தெலுங்கு - உங்களுக்காக தமிழிலே:
------------------------------------------------------------------
அவள் காத்திருக்கிறாள், தோட்டத்திலே.. குளக்கரைப் படித்துறையிலே - இரவு நேரத்தில், - எப்படியும் கண்ணன் வருவான்,- அவன் சொல்லிவிட்டான், இரவு ஆரம்பிக்கும்போது வந்துவிடுவேன் என்று..- அவன் சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுபவன்தான்.. - இன்று வரை அப்படி காப்பாற்றிகொண்டிருப்பவன்தான்.. அவனை நம்பு மனமே.. சற்றுப் பொறுத்திரு.. இரவு வந்துவிட்டதே என்று ஏன் பரபரக்கிறாய்?.. அவன் வருவேன் என்று வாக்குக் கொடுக்கும்போது நீ நம்பித்தான் ஆகவேண்டும் மனமே.. பொறு.. பொறு.. என்ன நேரம் கடந்து போனால் என்ன.. போகட்டுமே.. வருவேன் என்று சொன்னவன் வராமல் போய்விடுவானா..

வருவான்.. எனக்காக வருவான்..வந்துதான் ஆக வேண்டும்.. என்னை ஏமாற்றமாட்டான் என் கண்ணன்.. என்ன இரவு போகின்றதே என்று ஏன் மனமே கிடந்து அல்லாடுகிறாய்.. தவிக்காதே..வந்துவிடுவான்..காலை வருவதற்குள் வந்துவிடுவான்.. அட.. அதோ பார் பின்னால் அவன் காலடி ஓசை கேட்கிறதே.. என் கண்ணன் வந்துவிட்டான்.. என் மன்னன் தான் .. அவன் தான்.. அவனை அணு அணுவாய் ரசிப்பவளாயிற்றே.. அவன் காலடி ஓசையை கண்டுகொள்ளமுடியாதா.. கள்ளன்.. எத்தனை மெல்லமாக வருகிறான்.. வரட்டும்.. அவனே வந்து தன் கள்ள் முகத்தைக் காண்பிக்கட்டுமே.. நாமாக அவனை ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்?...

கண்ணன் வந்தான்.. மங்கை தனக்காக தன்னந்தனியே தலையைக் குனிந்து காலுக்கு முட்டுக்கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள்.. தான் வந்ததை அறியவில்லையோ.. மெல்ல அடியெடுத்து மங்கை பின்னே சத்தமில்லாமல் அமர்ந்து தன் கைகளை முன்னே நீட்டி அவள் கண்களை மூடினான்.

தன் கைகளால் அவன் கைகளை விலக்கினாள்.குனிந்திருந்த தலையை மெல்ல நிமிர்த்தி தலைக்கு மேல் தெரிந்த தலைவன் கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்கள் என்னதான் மாயம் செய்ததோ..மங்கை மயங்கி வெட்கம் சேர தன் அகல விரித்த கண்களை மெல்ல மெல்ல மூடினாள். அவனும் மதி மயங்கிப் போய் அந்த அழகு முகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் அகல விரிந்தன.

"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்"
(ஆண்டாளின் 13ஆவது பாவைப்பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு திருவேங்கல அம்மையார் தெலுங்கினில் சொன்னது)

Labels: